தூத்துக்குடி: தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் பசு ஒன்று இறந்த நிலையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு கரை ஒதுங்கியது.
இந்நிலையில், முத்துநகர் கடற்கரைக்கு வியாழக்கிழமை காலையில் வந்திருந்த பொதுமக்கள் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்து, மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு.
அதன்பேரில், தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய பூங்கா வனச்சரக அலுவலர் ஜினோ பிளசில் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் இன்று காலை முத்துநகர் கடற்கரைக்கு வந்தனர். பின்னர், இறந்து கிடந்த அரியவகை கடல் பசுவை கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.
சுமார் 7 அடி நீளமும் 80 முதல் 100 கிலோ எடை கொண்ட கடற்பசு
இதையும் படிக்க | நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் அவதியா?
இது, சுமார் 7 அடி நீளமும் 80 முதல் 100 கிலோ எடை கொண்டதாகவும் இருப்பது தெரிய வந்தது. மேலும், நான்கு முதல் ஐந்து வயது வரை இந்த கடற் பசுவுக்கு இருக்கலாம் என தெரியவந்தது.
பரிசோதனை செய்த மருத்துவர்கள்
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கப்பல் அல்லது படகு ஏதேனும் ஒன்றில் மோதி முகத்தில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடற்பசு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதை அடுத்து இறந்த கடற்பசு கடற்கரையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது.