திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வந்தார்.
முன்னதாக, மாவட்ட எல்லையான கோவில்வெண்ணி பகுதியில் திமுக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு வந்தார். முதல்வரின் வருகையையொட்டி தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காரிலிருந்து இறங்கிய முதல்வர், தடுப்புகள் அருகே வந்து அங்கிருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி, போலீசாரின் மரியாதை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
மாலையில் காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.
அத்துடன், காட்டூரில் 7000 சதுர அடி பரப்பளவில் ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபம், திருமண மண்டபம் இணைந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுகிறார்.
இரவில், சன்னதி தெருவில் தங்கும் அவர், புதன்கிழமை காலை மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார்.
இதையொட்டி, முதல்வர் செல்லும் பாதைகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கென, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முதல்வரின் வருகையையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாள்கள் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.