ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இடைத்தேர்தலையொட்டி பண விநியோகம் உள்ளிட்ட முறைகேடுகள், விதிமீறல்கள் நடைபெற்றதாக புகார்கள் வெளியான நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்திய தேர்தல் ஆணைய துணைத் தலைவர் அஜய், காணொலி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 77 போ் போட்டியிடுவதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் பண விநியோகம் செய்வதாக புகார் எழுந்தது. மேலும், கொலுசு, அசைவ உணவு போன்றவற்றைக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர்கள் பண விநியோகம் செய்தது உறுதி செய்யப்பட்டால், இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பணவிநியோகம் செய்யப்பட்டதால் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.