போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று (ஜன.3) நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் இதனை வலியுறுத்தினார்.
காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில், போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்திட அறிவிக்கப்பட்டுள்ள புதிய வாட்ஸ் அப் எண் 9498111191 குறித்தும், பொதுமக்கள் இது தொடர்பான புகார் அளிப்பதை எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள காவல்துறை முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இதனிடையே தமிழகத்திலுள்ள எந்தவொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் விற்பனை இல்லை என்ற நிலையை எட்டும் வகையில் செயலாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு குற்றவாளி கைது செய்யப்படும்போதும் அக்குற்றவாளி இரண்டாவது முறையாக இந்தக் குற்றத்தைச் செய்கிறானா என்பதை ஆய்வு செய்து, அதுபோன்ற குற்றவாளிகள் ஜாமினில் செல்வதை சட்டரீதியாகத் தடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.