சென்னையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 14 முதல் 27ஆம் தேதி வரை 446 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.8,92,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு சுற்றித்திரியும் மாடுகள், மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாடுகளின் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000 விதிக்கப்படுகிறது.
மாடுகளின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்குள் அபராதத் தொகையினை செலுத்தி மாடுகளை மீட்டுச் செல்லாத நிலையில், மூன்றாவது நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாடுகளை பராமரிக்க பராமரிப்புத் தொகையாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.
அந்தவகையில், சென்னையில், டிசம்பர் 14 முதல் 27ஆம் தேதி வரை 446 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.8,92,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை 50, அடையாறு 50, கோடம்பாக்கம் 36 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.