சேலம்: தவறான சிகிச்சை அளித்து பார்வை இழந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவர் கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே சிகிச்சையின்போது சத்யாவுக்கு ஊசி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு கண் வீக்கம் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் கேட்ட நிலையில் சரிவர பதில் அளிக்காததால் அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சத்யாவின் வலது கண்ணில் பார்வை பறிபோனதாகத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சடைந்த உறவினர்கள் இது குறித்து அரசு மருத்துவமனையில் புகார் தெரிவித்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தவறான சிகிச்சையால் கண்ணை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் திடீரென அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.