சென்னையில் நிரந்தரமாக புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், சென்னையில் நிரந்தரமாக புத்தக பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சிறந்த எழுத்தாளர்களை பாராட்ட தயங்கமாட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதி பெயரில் ரூ.114 கோடி மதிப்பில் மதுரையில் நூலகம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. புத்தக கண்காட்சிகளால் இலக்கிய எழுச்சி, அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. ஏராளமான தமிழ் காப்பு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மொழிதான் நமது பண்பாடு, நமது அடையாளம். மொழியை காப்பதற்கான கடமை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி எழுத்தாளர்களுக்கும் உள்ளது என்றார். தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) சாா்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு
அதன்படி நிகழாண்டுக்கான 46-ஆவது சென்னை சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் ஜன. 22-ம் தேதி வரை மொத்தம் 17 நாள்கள் நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கூடுதலாக 200 சோ்த்து மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.