கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே 11 சந்தன மரங்களை வெட்டி திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், மா.புடையூர் கிராமத்தில் காட்டுக்கொட்டகையில் வசித்து வருபவர் நாராயணசாமி (70) விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் அனுமதி பெற்று சந்தனம் மரம் நட்டு வளர்த்து வந்தார். தற்போது, இந்த மரங்கள் வெட்டும் பருவத்தில் இருந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு நாராயணசாமி நிலத்திற்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 11 மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து, ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.