சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலைக் கண்டித்து நாளை(ஜன. 12) மாலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி பெயர்களை உச்சரிக்க ஆளுநர் மறுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலைக் கண்டித்து நாளை(ஜன. 12) மாலை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'சட்டமன்ற ஜனநாயக மரபை மீறிய ஆளுநரின் செயல் கண்டனத்திற்குரியது! ஆளுநர் பதவியிலிருந்தும், தமிழகத்தை விட்டும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்!' என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியறுத்தி விசிக சார்பில் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.