தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்.என். ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.