காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை நெற்கதிர் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.
இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.
கடைசியாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே காடையூர் பகுதியைச் சேர்ந்த பேபி என்ற பெண் பக்தரின் கனவில் வந்ததாக, சனிக்கிழமை நெற்கதிர் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இளநீர் மற்றும் தென்னை ஈக்குமாறு நீக்கப்பட்டு, தற்போது நெற்கதிர் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.