அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை திடீரென அகற்றப்பட்டது.
குழந்தைக்கு அலட்சியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெற்றோா் குற்றஞ்சாட்டியதால், அதுகுறித்து விசாரிக்க மூவா் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தஸ்தகீா் - அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிா். தலையில் நீா் கோா்த்தல் பிரச்னை இருந்ததால் குழந்தை முகமது மகிரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அண்மையில் பெற்றோர்கள் அனுமதித்தனர்.
அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு ட்ரிப்ஸ் போடப்பட்ட வலது கை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்து, அழுகி உள்ளது. இதனைத் தொடர்ந்து எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது.
குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததே கை அகற்றும் நிலைக்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர்.
இந்நிலையில், கையிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தவறிழைத்த ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கையை இழந்த முகமது மகிருக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.