திருநெல்வேலி பொன்னாக்குடி அருகே சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி சங்கு முத்தம்மாள் தெருவைச் சேர்ந்த பெண்ணுக்கு நாங்குநேரியைச் சேர்ந்த நபருடன் ஜூலை 5 ஆம் தேதி ராமய்யன்பட்டியில் திருமணம் நடந்துள்ளது. மாலையில் நாங்குநேரியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு புதுமணத் தம்பதிகளை உறவினர்கள் இரண்டு வாகனங்களில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்புகையில் பொன்னாக்குடி அருகே நான்கு வழிச் சாலையில் வரும்போது சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் கார் (ஒரு வாகனம்) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலை முழுவதும் மழை நீரால் ஈரமாக இருந்ததால் 50 அடி தூரத்திற்கு கார் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இதில் சாமித்துரை மற்றும் பிரவீன் ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த கண்ணன், நவீன், முத்துக்குமார், பத்ரகாளி, ஜான்சன் துரை உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர். பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது திருமணமான நாள் இரவே பெண் வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நான்கு வழிச் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் இந்த சாலையில் விபத்து நேர்வது, உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. டோல்கேட் கட்டணம் மட்டும் வசூலிக்கும் பராமரிப்பவர்கள் சாலையை முறையாகப் பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.