முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் புதன்கிழமை 51.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 40 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. அதன் காரணமாக அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,604 59 கன அடி தண்ணீர் வந்தது.
அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்த அளவாக இருந்ததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலையடைந்தனர். முதல் போக சாகுபடி கேள்விக்குறியானது. இந்த நிலையில் அணை அமைந்துள்ள கேரளாத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 4 நாள்களாக பெய்து வருகிறது. தற்போது பெய்துவரும் பருவமழை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதிகரித்த நீர் வரத்து, மின் உற்பத்தி உயர்ந்த நீர் மட்டம்
புதன்கிழமை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 87.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 60 மி.மீ., மழையும் பெய்ததால் அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2112.98 கன அடியாகவும் வியாழக்கிழமை பெரியாறு அணையில் 51.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 40.0 மி.மீ., மழையும் பெய்ததால் அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,604 கன அடியாகவும் வந்தது. நீர் மட்டம் 115.90 ஆக இருந்தது வியாழக்கிழமை ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 116.80 அடியாக உயர்ந்தது. அதே போல் நீர்வரத்தும் ஒரே நாளில் 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
தமிழக பகுதிக்கு விநாடிக்கு 256 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் வியாழக்கிழமை 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு மின்னாக்கி இயக்கப்பட்டு 32 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 116.90 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 2,069 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,604.50 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 356 கன அடியாகவும் இருந்தது.
அணை பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் முதல் போக நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.