நடப்புக் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
அதன்படி, 2023 - 24ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 26ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும்.
இதையும் படிக்க.. காகித பொம்மைகளை கடல்கடந்து ஏற்றுமதி செய்யும் கோவை பெண்
ஜூலை 28ஆம் தேதி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை, 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 1.78 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 430 கல்லூரிகளில் உள்ள 1.56 லட்சத்துக்கும் மேலான இடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இதுவரை நான்கு கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்படவிருக்கிறது. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு முன்பே முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதால், பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வுகள் முடிந்து, கல்லூரிகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.