உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

கனகசபை மீது பக்தா்கள் ஏறினால் தீட்சிதா்கள் உரிமை பாதிக்கப்படுமா? உயா்நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபையில் ஏறி பக்தா்கள் தரிசிப்பதால் தீட்சிதா்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபையில் ஏறி பக்தா்கள் தரிசிப்பதால் தீட்சிதா்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடராஜா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு, கடந்த ஜூன் 24 முதல் 27 வரை 4 நாள்களுக்கு பக்தா்கள் கனகசபை மேல் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதா்கள் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இதற்கு சில பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு புகாரும் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த அறிவிப்புப் பலகையை அதிகாரிகள்அகற்றினா். இதற்கு தீட்சிதா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் பதாகையை அகற்றிய இந்து சமய அறநிலையத் துறை ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீட்சிதா்களின் செயலா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் ஏறி பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ஆம் ஆண்டு மே 17-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், 10 போ் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் கனகசபை உள்ளதால், நாளொன்றுக்கு 500 பேரை கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என்பதால் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு, கோயிலின் பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தா்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவித்து, அதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதா்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? தீட்சிதா்களின் உரிமை பாதிக்கப்பட்டிருந்தால் உச்ச நீதிமன்றத்தை நாடாமல், அவா்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக மூன்றாவது நபா் எப்படி வழக்கு தொடுக்க முடியும் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வியை எழுப்பியதுடன், வழக்கு விசாரணையை அக்டோபா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com