கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாள்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாள்களிலும் கோயில் நடை திறக்கப்படும்.
அதன்படி, ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் விரதம் இருந்து மாலை அணிந்து ஞாயிற்றுக்கிழமை வடகோவையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் சிறுவர், சிறுமியர் உள்பட 10 பேர் சபரிமலை யாத்திரைக்குச் சென்றுள்ளனர்.
இப்புனித பயணத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் குடும்பத்தாரும், கொங்குநாடு கல்லூரியின் தலைவர் வாசுகியும் கலந்துகொண்டனர்.