சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் பொன்முடி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் வானூர் அருகே செம்மண் குவாரி ஏலத்தில் அமைச்சர் பொன்முடி தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை செம்மண் குவாரி முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பொன்முடி, கெளதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான 9 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இதையும் படிக்க | எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர்!
மேலும் விசாரணைக்காக பொன்முடியை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சென்னை, விழுப்புரத்தில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
அதன்படி, 2 ஆவது நாளாக சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளத சிகாமணி ஆகியோர் சென்றுள்ளனர். மாலை 4 மணிக்கு விசாரணை தொடங்குகிறது.