மன்னார்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை

மன்னார்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை


மன்னார்குடி: மன்னார்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(78). மனைவி தாயம்மாள் (75). இவர்களுக்கு ஒரு மகன் வழக்குரைஞராக மதுரையில் பணியாற்றி வருகிறார். வயதான தம்பதிகள் இருவரும் தஞ்சாவூர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தம்பதி இருவருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இருவரும் தங்களது வயது முதிர்வு காரணமாகவும், உதவிக்கு ஆள் இல்லையே என்ற ஏக்கத்துடனும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார். அங்கு சோமசுந்தரத்தின் வாய்ப்பகுதியில் இருந்த கட்டியை அகற்றிய மருத்துவர்கள் அதனை புற்றுநோய் தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

இதனால், மனம் உடைந்த சோமசுந்தரம், தனது மனைவி தாயம்மாளை அழைத்துக் கொண்டு, புதன்கிழமை மாலை வாடகை காரில் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் ஈசனகுடி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்றில் நிறுத்தி ரோஸ் மில்க் ஒன்றை வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்துள்ளனர். அதில் விஷம் கலக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்காமல் தாயம்மாளுக்கும் கொடுத்துள்ளார். இந்த விவரம் கார் ஓட்டுநருக்கும் தெரியவில்லை.

பின்னர், அந்த காரில் கோட்டூர் ஈசனகுடி உறவினர் வீட்டுக்கு வந்த சோமசுந்தரம், வாடகை காரை திருப்பி அனுப்பினார். தானும், தனது மனைவியும் விஷம் குடித்திருக்கும் விபரத்தை வீட்டில் இருந்த உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். தெரிவித்த சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அதன் பின்னர் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சிகிச்சை பலனின்றி தாயம்மாள் இறந்துள்ளார். அவரைத் தொடர்ந்து சோமசுந்தரமும் இறந்தார். 

இது குறித்து , விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்த தம்பதியினரின் உடல் உடல் கூறாய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com