தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!
ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 9 பேருடன் இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது 5 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் வேலு, நாகநாதன்(எ)தட்சிண மூர்த்தி என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் சுரேஷ், ஆறுமுகம், மணிகண்டன், குமார், ஜெயசீலன், வேல்முருகன், முத்திருளாண்டி, சிவத்த பொறியன், நல்லதம்பி ஆகிய 9 மீனவர்களை கைது செய்தனர்.
காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற கடற்படையினர் நீரியல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்வதற்கான பணிகளை அதிகரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வுப்பகுதி!
மண்டபம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.