திருச்சி: திருச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க திருச்சிக்கு புதன்கிழமை காலை விமானம் மூலம் வருகை தரவுள்ளார்.
கருமண்டபம் பகுதியில் மாலையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதன்தொடர்ச்சியாக, வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவிலும் பங்கேற்கவுள்ளார். எனவே, இந்த இரு நாள்களுக்கும் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் (ஆளில்லா விமானம்) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கூறியது:
வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம்-2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதால் மாவட்டத்தில் ஜூலை 26, 27 (புதன், வியாழன்) ஆகிய தேதிகளில் பாதுகாப்புக் காரணம் கருதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: பொன்னேரியில் கடையடைப்பு!
எனவே, ஜூலை 26, 27 ஆகிய இரண்டு தினங்களில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.