ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் ராஜ கோபுரம், வெள்ளை கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம் உள்ளிட்ட பெரிய கோபுரங்களும், கோவிலை சுற்றி சிறிய சிறிய கோபுரங்களும் உள்ளது. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருக்கும் கோபுரத்தில் இரண்டு அடுக்குகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் அது உடைந்து விழாமல் இருக்க கட்டைகள் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் வழியாக தினசரி பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் பொதுமக்கள் மற்றும் திருக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கடந்து செல்வதால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறா வண்ணம் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
விரைவில் அந்த கோபுரத்தில் ரூ.67 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.