வடுகப்பட்டியில் அரசு பேருந்துகளை இயக்கக் கோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்!

வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளிக்கு பள்ளி வேலை நேரத்தில் வைகுந்தம் பகுதியிலிருந்து அரசு பேருந்துகளை இயக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
வடுகப்பட்டியில் அரசு பேருந்துகளை இயக்கக் கோரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்!


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளிக்கு பள்ளி வேலை நேரத்தில் வைகுந்தம் பகுதியிலிருந்து அரசு பேருந்துகளை இயக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

சங்ககிரி வட்டம், வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வைகுந்தம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமான மாணவ, மாணவிகள் நாள்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

சங்ககிரியிலிருந்து ஒரு அரசு பேருந்து காலை, மாலை இரு நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. வைகுந்தம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நேரத்தில் அரசு பேருந்துகள் வராததால் பெற்றோர்கள் தனியார் வேன்களை வாடகைக்கு அமர்த்தி மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். 

பள்ளிக்கு அரசு பேருந்து இயக்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளபள்ளி மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தும் சங்ககிரி காவல்துறையினர்.

இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர், நாமக்கல் மக்களை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் அரசு பேருந்துகளை பள்ளி நேரத்தில் இயக்காததால் சிரமம் அடைந்து வருவதாக கூறி மாணவ, மாணவிகள் வடுகப்பட்டியிலிருந்து வைகுந்தம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

வடுகப்பட்டி அரசு மாதிரிப்பள்ளிக்கு அரசு பேருந்து இயக்கக் கோரி புதன்கிழமை உள்புற சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுவரும் மாணவ, மாணவிகள். 

இது குறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி போலீசார் மாணவ, மாணவிகளை சாலைமறியலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனையடுத்து மாணவர்கள் பிரதான சாலையிலிருந்து விலகி பள்ளிக்கு செல்லும் உள்புற சாலையில் அமர்ந்து வைகுந்தம் பகுதியிலிருந்து பள்ளி வேலை நேரத்தில் அரசு பேருந்துகளை விடுவதாக உறுதியளித்தால் கலைந்து செல்வதாக கூறி தொடர்ந்து ஒரு மணி நேரமாக மறியலில் ஈடுபட்டுவருகின்றனர் 

சங்ககிரி உள்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சி.ராஜா மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com