தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகமான பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தைச் சேர்ந்த 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அவை, திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, திருநெல்வேலி, வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று இதுவரை 17 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்றார்.
மேலும் 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயரும், இப்பொருள்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.