கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
அதில், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால், 7 நாள்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலாச்சார நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் ஆபாச காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது என்றும், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஆபாச ஆடையில் சித்தரிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.