மதுரை: மதுரையில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் 2752 பேர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி பந்தய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வினை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதில், 100 மீட்டர் நீளம், 70 மீட்டர் அகலத்தில் 2752 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு காலை 7.23 மணிக்கு தொடங்கி, 8.45 மணிக்குள் கருணாநிதி உருவம் வடிவமைக்கப்பட்டது.
இதனை உலக சாதனை நிகழ்வாக டிரையும்ப் வேல்ர்டு ரெக்கார்ட் நிறுவனம் பதிவு செய்து அதற்கான சான்றிதழை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா உள்ளிட்ட அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.