விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்துக்குச் சென்ற திரைப்பட இயக்குநர் கெளதமனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்னைத் தொடர்ந்து, அந்தக் கோயிலுக்கு வருவாய்த்துறையினர் கடந்த 7-ஆம் தேதி பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர் வ. கெளதமன் புதன்கிழமை மேல்பாதி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களிடம் பேச முயன்றார்.தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.பாலமுருகன் மற்றும் போலீசார் அங்குச் சென்று கிராமமக்களிடையே பேசுவதற்கு அனுமதி மறுத்தனர்.
தொடர்ந்து, அவர் விழுப்புரம் மாவடடக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மாவட்ட எஸ். பி. கோ.சஷாங்க் சாயை சந்தித்து மேல்பாதி பிரச்னை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில் வ.கெளதமன் செய்தியாளர்களிடம் கூறியது.
மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அரசியல் கட்சியினர் பெரிதுப்படுத்தியதன் காரணமாகவே இப்பிரச்னை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியினர் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவே திட்டமிட்டு தூண்டி விட்டுள்ளனர்.
கோயில் பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை.
திரெளபதி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் காட்டப்படவில்லை.
வன்னிய சமூக மக்களை மட்டும் குறிவைத்து தாக்கும் நேர்மையற்ற போக்கை அரசியல் கட்சிகள் கைவிடவேண்டும். இருசமூகமக்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த மண்ணின் வரலாறும், உரிமையும் காக்கப்படும். அரசியல் சுய லாபத்திற்காக மக்களிடையே வன்மத்தைத் தூண்டுபவர் யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது.
திரெளபதி அம்மன் கோயில் பூட்டப்பட்டுள்ள நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. கோயிலில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு என்றார் அவர்.