நடராஜர் கோயிலில் விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் வருகிற ஜூன் 17-ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
ஜூன் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன் 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை விக்னேஸ்வரபூஜை மற்றும் ஹோமம் நடைபெற்றது. உத்ஸவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் கடாபிஷேகம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், இரவு நடராஜர் அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர், துணை செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர் மற்றும் உற்சவ ஆச்சார்யார் எஸ்.குருமூர்த்தி தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.