பராமரிப்பு பணி: வெண்டிபாளையம் ரயில்வே கேட் 15 நாட்களுக்கு மூடல்!
ஈரோடு: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை முதல் 15 நாள்களுக்கு மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை செல்லும் ரயில்கள் வெண்டிபாளையம் ரயில்வே கேட் கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த வழியாகத்தான் வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு தினமும் பலமுறை லாரிகள் சென்று வருகின்றன. இது தவிர வெண்டிபாளையம், கோண வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் மாநகர் பகுதிக்குள் வர வேண்டும். எனவே இந்த பகுதி முக்கியமான போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
இதையும் படிக்க | பவானி காலிங்கராயன் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு, ஜல்லி கொட்டுதல், சிக்னல் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு வசதியாக வெண்டிபாளையம் ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை முதல் வரும் 29 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் வெண்டிபாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மோளகவுண்டன்பாளையம், சோலார், நீல்கிரீஸ் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சுவரொட்டிகள் அந்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.