தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
தூத்துக்குடியில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு வியாழக்கிழமை (ஜூன் 15) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதியில் காற்று 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதையும் படிக்க | பாலியல் புகார்: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை!
இதையடுத்து, அன்றைய தினம் கடலுக்குச் செல்ல விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வரும் 18 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
மீன் பிடிக்க விசைப் படகுகள் கடலுக்கு செல்வதை பார்க்க மீனவர்கள் பலர் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து செல்வதால் தங்களுக்கு அதிக அளவிலான மீன்கள் கிடைக்கும் என விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.