முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி: பொள்ளாச்சி ஜெயராமன்

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கப்படும்
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி: பொள்ளாச்சி ஜெயராமன்
Published on
Updated on
1 min read

திருப்பூர்: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்று திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகரில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமைத் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடக்கிவைத்தார். 

இதன் பின்னர் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது: 

திமுகவில் எத்தனையோ மூத்த தலைவர்கள் காலம் காலமாக தியாகம் செய்து வந்தபோதும் அவர்களை எல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு தனது கட்சியின் முக்கியத் தலைவராக செந்தில்பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். இதன் விளைவு தற்போது தமிழகம் குட்டிச்சுவராகியுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும். இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றனர். ஏனெனில் ரூ.36 ஆயிரம் கோடி டாஸ்மாக், வரிகட்டாத பார் மூலமாகவும், மின்சாரத்துறை மூலமாகவும் முதல்வர் குடும்பத்துக்கு சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். 

செந்தில்பாலாஜி எதையாவது சொல்லி விட்டால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற அவர் பதற்றமாக உள்ளார். 

நிச்சயமாக ஏழை மக்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி அவர்களின் கண்ணீரில் கரைந்துவிடும். போலி மது விற்பனை மூலமாக திருச்சியில் 2 பேர், தஞ்சாவூரில் 2 பேர் என இறந்தனர். 
அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. 

தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கஞ்சா, அபின் போன்றபோதைப் பொருள்களின் கூடாரமாக திமுக அரசு மாற்றி வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கள்ளச்சாராய இறப்பின்போது வாய் திறக்காத திமுக கூட்டணிக்கட்சிகள் செந்தில்பாலாஜி கைதுக்காக கோபம் கொண்டு எழுகின்றனர். இதுதான் திமுக தோழமைக்கட்சிகளின் நிலையாகும். ஆகவே, விரைவில் இதற்கு எல்லாம் முடிவு கட்ட மக்கள் எழுச்சி ஏற்படும் என்றார். 

இதைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கும் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com