சென்னையில் 200 இடங்களில் நாளை (ஜூன் 20) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நாள் முழுவதும் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நாளை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
மழை பாதிப்பு பணிகள் குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அரசின் துரித நடவடிக்கையால் சென்னையில் திடீர் மழையால் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. 2021ஆம் ஆண்டு மழையின் போது மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது நீர் தேங்கவில்லை. கணேசபுரம் பகுதியில் மட்டும்தான் 11 மணிவரை தண்ணீர் தேங்கியது. மற்ற பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டன.
1913 என்ற எண்ணில் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 இடங்களில் பெரிய மரங்களும், 24 இடங்களில் விழுந்த சிறிய மரங்களும் அகற்றப்பட்டன.
கனமழையால் மரங்கள் விழுந்தால், அதனை அப்புறப்படுத்துவதற்கு உரிய சாதனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.