ஆம்பூர் அருகே பாலாற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே மாறாப்பட்டு பாலாற்றில் கடந்த சில மாதங்களாக தண்ணீரில் மீன்கள் செத்து மிதக்கின்றது. வாணியம்பாடி தோல் தொழிற்சாலை புது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியாகும் கழிவு நீர் பாலாற்றில் திறந்து விடப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது.
இந்த தண்ணீர் பாலாறு வழியாக ஆம்பூருக்கு வருகின்றது. தோல் தொழிற்சாலை கழிவுநீர் திறந்து விடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து சுற்றுச்சூழலுக்கு மாசுக்கேடு ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் விவசாய நிலங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இதுகுறித்து பலமுறை வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது மாராப்பட்டு பாலாற்றில் மீண்டும் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மரபட்டு பாராற்று தரைப் பாலத்தின் மீது சென்று செத்து மிதந்த மீன்களை பாலத்தின் மீது எடுத்துப் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோல் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.