திருப்பூர்: திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா நாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சமுதாய சேவா சங்கம், திருப்பூர் மண்டல மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, தவமையங்கள் ஆகியன சார்பில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார்.
திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவியர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் யோகா பயிற்சியைத் தொடக்கிவைத்தார். இதில், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவமேரி, உலக சமுதாய சேவா சங்கத்தின் திருப்பூர் மண்டல செயலாளர் ஏ.வி.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.