திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர் பனியன் பஜார் தீ விபத்து தொடர்பாக சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் பனியன் பஜார் தீ விபத்து தொடர்பாக சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியின் மையப்பகுதியான ராயபுரம் பகுதியில் காதர் பேட்டை எனப்படும் பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறியது முதல் பெரியது வரையிலான பின்னலாடை துணிகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 50 கடைகளுக்கு மேல் இருக்கின்ற நிலையில், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் இங்கு பனியன் துணிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

வழக்கம்போல கடையில் அனைத்தும் நேற்று இரவு 9 மணிக்குள்ளாக பூட்டப்பட்டு சென்ற நிலையில் சிறிது நேரத்தில் பனியன் பஜாரில் இருந்து தீ எரிவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 

இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தீயை உடனடியாக அணைக்க முடியாத காரணத்தால் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள், தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்ததால் காயமோ, உயிர்ச்சேதமோ இல்லை.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு: இதனிடையே, சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் , மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

தீயணைப்பு பணிகள் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், காதர்பேட்டை பகுதியில் 50 கடைகளுக்கும் மேலாக தீ விபத்தின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்த கடைகளின் சேதமதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

அதே வேளையில், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கூறுகையில், கடைகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதால் வாழ்வாதரத்தை இழந்துள்ளோம். ஆகவே, அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com