பிரதமர் அமெரிக்கா செல்கிறார், ஆனால் மணிப்பூர் செல்ல முடியவில்லை: கே.எஸ். அழகிரி விமர்சனம்
பிரதமர் நரேந்திர மோடியால் அமெரிக்கா செல்ல முடிகிறது, ஆனால் மணிப்பூர் செல்ல முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமரிசித்துள்ளார்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் தொடக்கம் முதல் வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசிய அவர், கலவரத்தால் மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் மோடியால் அமெரிக்கா செல்ல முடிகிறது, வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க செல்ல முடிகிறது. ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை.
ரயில்களை ஒரு ஸ்டேஷன் மாஸ்டரால்கூட துவக்கிவைக்க முடியும். இதற்காக பிரதமர் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், மணிப்பூருக்கு பிரதமர்தான் கண்டிப்பாக செல்ல வேண்டும். அவரைத் தவிர யார் சென்றாலும் மணிப்பூரில் கலவரம் அடங்காது, அதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியாது.
பிரதமர்தான் செல்லவில்லை, நாமாவது செல்வோம் என்றுதான் ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார்' என்று பேசினார்.