தமிழக டிஜிபி பதவியிலிருந்து இன்றுடன் ஓய்வுபெற்றார் சைலேந்திரபாபு.
பல்வேறு மோசடிகள் குறித்தும் விடியோ மூலம் மக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டியவர் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் ஓய்வுபெற்றதை முன்னிட்டு, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர் சைலேந்திர பாபு. 1987ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி. எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்டப் பட்டப்படிப்புகளை முடித்தவர். சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்துள்ளார்.
தனது 25வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல்துறைக்குத் தேர்வானவர். காவல்துறையில் பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யாக இருந்தவர்.
இவர் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றியபோதுதான், பல முக்கிய ரௌடிகளின் வழக்குகள் முடிவுக்கு வந்தன. ரௌடிகளின் ஆதிக்கம் குறைந்தது. சென்னையில் 2015ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தபோது, இவரது மகத்தான் பல பலரது கவனத்தையும் பெற்றது.
இதையும் படிக்க.. துறை இல்லாத அமைச்சர்கள்! செந்தில் பாலாஜிக்கு முன்னர் இருந்தவர்கள்!!
இவரது தலைமையில், கடலோர பாதுகாப்புக் குழுமம் பலம் அடைந்தது. சிறைத் துறை தலைவராக பணியாற்றியபோது, சிறைக்கைதிகள் விடுதலையாகும்போது அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். தீயணைப்பு, ரயில்வே காவல்துறை என அவர் பல துறைகளில் பணியாற்றி, அனைத்திலும் தனக்கென முத்திரைப் பதித்தவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் எழுச்சிமிகு உரையாடல்களை நிகழ்த்தி, மாணாக்கர் மனதில் லட்சியங்களை விதைப்பதில் வல்லவர்.
உடல் ஆரோக்கியம் தொடங்கி, தற்போது நடக்கும் புதிய மோசடிகள் வரை பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விடியோ மூலம் மக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டனர். குற்றம் நிகழ்ந்த பிறகு குற்றவாளிகளை பிடிப்பதை விடவும், குற்றம் நிகழாமல் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சாலச் சிறந்தது என்பதை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு விதமான சைபர் கிரைம்கள் குறித்தும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
தமிழக டிஜிபியாக பணியாற்றி வந்த சைலேந்திரபாபு இன்றுடன் ஓய்வுபெற்றார்.