ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரும் 10ஆம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளிய இளங்கோவன், 1.10 லட்சம் வாக்குகளைப் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி (நேற்று) எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி எம்.எல்.ஏ.வாக இளங்கோவன் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன், பதவியேற்பு குறித்த தேதியை சட்டப்பேரவைத் தலைவர் உறுதி செய்வார் எனக் குறிப்பிட்டார்.