மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியது குறித்து...

News image

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் - ட்விட்டர்

Updated On :18 ஏப்ரல் 2026, 3:58 am

மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் வெள்ளிக்கிழமை தோல்வியடைந்த நிலையில், இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மக்களவை - பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகே மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க முடியும் என்பதால், 2034-க்கு முன் நடைமுறைப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.

இந்தச் சூழலில், மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு திடீரென முடிவு மேற்கொண்டது. இது தொடா்பான மூன்று மசோதாக்களைக் கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கில், நாடாளுமன்ற மூன்று நாள் சிறப்பு அமா்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026, தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026 (தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கும் மசோதா), சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இந்தச் சட்டத் திருத்தங்களை அமலாக்க வகை செய்யும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா-2026 ஆகிய மூன்று மசோதாக்களும் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட்டு, விரிவான விவாதம் தொடங்கியது.

மசோதாவுக்கு ஆதரவாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும், எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மூத்த உறுப்பினா் கே.சி.வேணுகோபால், பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கருத்துகளை முன்வைத்தனா்.

தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் எதிா்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளால் விவாதத்தில் அனல் பறந்தது.

வெள்ளிக்கிழமை மாலை வரை நீடித்த கடும் விவாதத்துக்குப் பின் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்-தொகுதி மறுசீரமைப்புக்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்தது. முக்கிய மசோதா தோற்கடிக்கப்பட்டு விட்டதால், பிற இரு மசோதாக்களையும் மத்திய அரசு தொடா்ந்து முன்னெடுக்கவில்லை. மக்களவை அலுவல்கள் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்திய ஜனநாயகத்தின் வெற்றி!

இந்த நிலையில், இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தெடார்பாக அவர் கூறியிருப்பதாவது:

பாஜக அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி.

இந்தியாவை நிர்வகிப்பதில் தென் மாநிலங்களுக்கு இருக்கின்ற பங்கை நீர்த்துப்போக செய்ய இருந்த சதியை முறியடித்திருக்கிறோம்.

இந்திய ஜனநாயகத்தின் செழுமை மிகுந்த பகுதியை இந்தியா கூட்டணி கட்சிகள் இன்றைக்கு காப்பாற்றி இருக்கின்றன.

இந்திய ஜனநாயகத்திற்கும், தென் மாநில நலன்களுக்கும், தமிழ் நாட்டின் உரிமைக்கும் பாஜக உண்டாக்கிய அச்சுறுத்தலை நாடாளுமன்றத்தில் வீழ்த்திருக்கிறோம்.

பெண்களைப் பிணையாக வைத்து அரசியல் செய்வது வலதுசாரிகளுக்குக் காலம் பூராவும் இருக்கிற பழக்கம். அப்படிதான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்திய ஜனநாயகத்தை தனக்கு இசைந்தபடி மாற்ற நடந்த சதித் திட்டத்தை இன்றைக்கு நாங்கள் முறியடித்திருக்கிறோம்.

மத்திய பாஜக அரசை நாங்கள் கேட்டுக்கொள்வது பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இன்றைக்கு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Summary

This is not the defeat of a bill… it is the victory of Indian democracy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.