சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை, குமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடப்பட்டது.
அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையிலேயே டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மக்களுக்கு கிடைக்கின்ற எந்த சலுகையும் பாதிக்கப்படாது. பெண்களுக்கான இலவச பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,600 கோடி வழங்கியுள்ளது. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது. பேருந்துகளை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசுப் பேருந்துகள் எதுவும் தனியாரிடம் அளிக்கப்பட மாட்டாது.
எந்த வழித்தடத்தில் தேவைப்படுகிறதோ அங்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மாலை நடத்த உள்ள போராட்டத்தை அண்ணா தொழிற்சங்கம் கைவிட வேண்டும். புதிய பேருந்துகளை வாங்க இந்த ஆண்டும் நிதி ஒதுக்கப்படும் என்றார்.