வரும் நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. முன்னதாக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், கரோனா நிவாரணம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக அரசால் கொண்டு வரப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிக்க | 'தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி' - பிகார் குழு நன்றி
அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்பது பெண்களிடையே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் வரும் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதுகுறித்த அறிவிப்பு இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாளை (மார்ச் 8) உலக மகளிர் தினத்தையொட்டி, வாழ்த்துச் செய்தியில் முதல்வர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதைக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், 'அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | உலக மகளிர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து