சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் மேம்பாலப் பணிகளுக்காக கூடுதலாக ஐந்து ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், கடந்த பொங்கல் பண்டிகைக்கே திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், திறக்கப்படவில்லை.
இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதற்கான தேதிகள் எதுவும் இறுதி செய்யப்படாத நிலையில், புதிய மேம்பாலம் அமைக்க ஐந்து ஏக்கர் நிலத்தை சென்னை மாநகராட்சி மேம்பாட்டுக் கழகம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பண்டிகை காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணி: கைவிடப்படும் 6 ரயில் நிலையங்கள்
சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்த பேருந்து நிலையத்துக்கு அதிக நிலம் தேவைப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த மாநகராட்சிப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஐ. ஜெயக்குமார் கூறுகையில், தேவைப்படும் நிலங்கள் குறித்த விவரத்தை சிஎம்டிஏவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். இது தவிர்த்து, பேருந்து நிலையத்தின் முன்பக்க நுழைவுவாயில் அருகே சர்வீஸ் சாலையுடன் இணையும் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவும் கூடுதல் நிலம் தேவைப்படுகிறது.
சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் எம்டிசி மற்றம் எஸ்இடிசி உள்பட 300 பேருந்துகள் வரை நிறுத்தி, இயக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரிக்கலாம்!
இதனிடையே, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தையும் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு திட்டம் நீட்டிக்கப்பட்டால் 2025 - 26ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையவும் வசதி ஏற்படுத்தப்படும். போதிய நிதி ஒதுக்கப்படாததால் தற்போது அந்தப் பணி தொடங்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.