திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவாரூா்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயன்மாா்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். இந்தக் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் புகழ் பெற்றது.

ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் முன்னின்று நடத்தியிருப்பதாகவும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஹஸ்த நட்சத்திரத்தில் துவஹாரோஹணம் எனும் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தோராட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீர்த்தம் அருளி, உத்திராடத்தில் விழாவை பூர்த்தி செய்யப்படும் என்பது திருவாரூர் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும். இது 36 நாள் திருவிழாவாகும். 

இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்பு பூர்வாங்கம் ஒரு நாள், ஐயனார் திருவிழா 5 நாள், மீண்டும் பூர்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாள், பூர்வாங்கம் 2 நாள் என கொண்டாடப்பட்டு அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாள்கள் என மொத்தம் 55 நாள்கள் விழா நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம், தைப்பூச நாளில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 

முன்னதாக காலையில் சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு வீதி உலாவுக்குச் சென்றனர். வீதி உலாவுக்குப் பிறகு, பஞ்சமூர்த்திகளும் தியாகராஜர் சந்நிதி கொடிமரம் முன்பு நிறுத்தப்பட்டனர்.

பின்னர், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றப்பட்டதை அடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவார் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்து, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தனர். 

நிகழ்ச்சியைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com