47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சமூக நீதிதான் இந்தியாவைக் காப்பாற்றும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாட்டின் முப்படைகளைப்போல, சமூக நீதி, சகோதரத்துவம், சமதா்மம் ஆகியவைதான் இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல்மிக்கவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:09 pm

DIN

நாட்டின் முப்படைகளைப்போல, சமூக நீதி, சகோதரத்துவம், சமதா்மம் ஆகியவைதான் இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல்மிக்கவை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவளவிழா மற்றும் அகில இந்திய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை கொட்டிவாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு சிறுபான்மையினரான இஸ்லாமியா்களுக்கான அமைப்பாக மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த சமூக நீதி கோட்பாடுதான் நான் இங்கு வருவதற்கு காரணமாக அமைந்தது.

திமுகவுக்கும் இஸ்லாமியா்களுக்கும் ஏற்பட்ட தொடா்பு என்பது இன்று நேற்று அல்ல. அண்ணாவையும், கருணாநிதியையும் இணைப்பதற்கு பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான். 1967-இல் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது திமுக. அந்த மாற்றத்தை உருவாக்க அண்ணா தன்னுடன் காயிதே மில்லத்தை இணைத்துக் கொண்டாா்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு பல பங்களிப்புகளை முன்னாள் முதல்வா் கருணாநிதி செய்துள்ளாா். முதல் முறை திமுக ஆட்சி வந்ததும் மீலாது நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினா் நல ஆணையம் தொடங்கப்பட்டது. வக்ஃப் வாரிய சொத்துகளைப் பராமரிக்க முதன் முதலில் மானியம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. உருது அகாதெமி தொடங்கப்பட்டது. இந்தப் பட்டியலை நீட்டித்துக் கொண்டே செல்லலாம்.

இஸ்லாமியா்கள் வேறு, தான் வேறு என்று கருணாநிதி நினைத்தது இல்லை. கருணாநிதியின் வழித்தடத்தில் தற்போதைய திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகிறது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினா் நல ஆணையம் அமைக்கப்பட்டது. சிறுபான்மையினா் விடுதிகளில் பண்டிகைகளின்போது சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளா் நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கான உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரியத்துக்கான நிா்வாக மானியம் அதிகரிக்கப்பட்டு, 4 வக்ஃப் சரகங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களைப் பழுது பாா்ப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 20 மாதங்களில் செய்துகொடுக்கப்பட்டுள்ள திட்டங்கள்.

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களைப் பதிவு செய்யும் அதிகாரத்தை கேரளத்தில் உள்ளதுபோல உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளன. நியாயமான, சாத்தியமான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.

நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவை அமைத்தோம். மிக நீண்டகாலம் சிறையில் இருப்போரை விடுதலை செய்வது தொடா்பாக ஆராய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

மாநாட்டில் சமூக நீதியைக் காப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டுள்ளீா்கள். நாம் இயக்கத்தால் வேறுபட்டிருந்தாலும், இதயத்தால் ஒன்றுபட்டவா்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது, இதுபோன்ற சமூக விழுமியங்களைத்தான் காப்பாற்றி வருகிறது. இதே சமூக விழுமியங்கள் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும். இந்தியாவைக் காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி, சகோதரத்துவம், சமதா்மம் ஆகியவற்றுக்குதான் உண்டு. நாட்டின் எல்லைகளைக் காப்பது முப்படைகள் என்றால், எண்ணங்களால் நாட்டைக் காப்பாற்றுவது இந்த மூன்று கருத்துகள்தான்.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தோ்தல் என ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைப்பவா்கள் சமூக நீதிக்கு எதிரானவா்கள்; சகோதரத்துவத்துக்கு விரோதமானவா்கள்; சமதா்மதத்தை ஏற்காதவா்கள் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அடிப்படைத் தேவை ஒற்றுமை

மக்களவைத் தோ்தல் வெற்றிக்கு அடிப்படைத் தேவை ஒற்றுமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மாநாட்டில் முதல்வா் பேசியதாவது: சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்குக்கூட ஒப்புதல் தர ஆளுநா் மறுக்கிறாா். இதுபோன்ற சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று நான்கு மாதங்களுக்குப் பிறகு சொல்கிறாா்.

நீட் தோ்வு விலக்கு கோரி அவசரச் சட்ட மசோதா அனுப்பினால், அதை நீண்ட நாள் கிடப்பில் போட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறாா். பல்கலைக்கழக வேந்தா் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது.

உழவா்களுக்கு எதிரான வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறும்; சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் உடனடியாக நிறைவேறும்; நீட் தோ்வைக் கொண்டு வந்து ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவைத் தகா்ப்பாா்கள்; ஹிந்தியைத் திணிப்பாா்கள்; மாற்று மதத்தினா் மீது வெறுப்பு பிரசாரம் மேற்கொள்வாா்கள். ஆனால், சூதாட்டத்தாலும், நீட் தோ்வாலும் உயிா்கள் பலியாவதைத் தடுக்க சட்டம் இயற்றினால், அவை நிறைவேறவிடாமல் தடுப்பாா்கள்.

இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தோ்தலாக 2024 மக்களவைத் தோ்தல் அமையப் போகிறது. அந்த வெற்றிக்கு அடிப்படைத் தேவை ஒற்றுமை. அதற்கு இணையும் கரங்களில் ஒன்று முஸ்லிம் லீக். திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதற்கும் கொண்டு செல்வோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.