பிரசித்தி பெற்ற திருவெள்ளறை பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவம் (துவஜாரோஹணம்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷ பெருமாள் திருக்கோயில். இக்கோயில் 108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய திருத்தலமாக விளங்குகிறது. ஸ்வேதகிரி என்று அழைக்கப்படும் இத்தலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான இத்திருக்கோயிலில் ப்ரமோத்ஸவம் தேர்த்திருவிழாவானது கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பெருமாள் தாயார் மூலஸ்தானத்திலிருந்து பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. அதனையடுத்து அனந்தராயர் மண்டபத்திலிருந்து திருவீதி உலா நடைபெற்றது.
இதனையடுத்து புண்யாவாஹனம் , மற்றும் பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் புண்டரீகாஷப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இவ்விழாவின் மார்ச் 13ம் தேதி கருட வாகன புறப்பாடும், மார்ச் 18ம் தேதி திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.