நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்: விஜயகாந்த்

நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்: விஜயகாந்த்

நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நிலம் கையகப்படுத்தப்பட உள்ள வளையமாதேவி, கீழ்பாதி, கரிவெட்டி, ஊ.ஆதனூர் கிராமங்களின் நுழைவாயில் பகுதியில் போலீஸார் தடுப்புகளை அமைத்து, வெளியூரைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் நுழைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.  
எனது ஆணைக்கிணங்க கடந்தாண்டு அக்டோபர் மாதம் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவராக இருந்த ராகேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியிருந்தார். 

தற்போது அராஜக முறையில் விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்திற்கும், அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழக காவல்துறையை பயன்படுத்தி மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு விளை நிலங்களை அபகரிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?.
 மக்களுக்கான திட்டங்களை மட்டுமே மத்திய மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அதை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் எந்த ஒரு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை ஏற்று கொள்ள முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்னை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது தேமுதிக தான்.
 எனவே மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.  இந்த விவகாரத்தில்  தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com