கண்டோன்மென்ட் கழக தேர்தல்: 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் - முத்தரசன் கண்டனம்

சென்னை கண்டோன்மென்ட் கழக தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்
Published on
Updated on
1 min read

வரும் ஏப்ரல் 30 இல் நடைபெற உள்ள சென்னை கண்டோன்மென்ட் கழக தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சென்னை கண்டோன்மென்ட் போர்டு  தேர்தல் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் சுமார் 15 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கண்டோன்மெண்ட் கழக எல்லக்குள் குடியிருப்போர் அனைவரும் வாக்காளர்களாக இருந்த நிலை மாற்றப்பட்டு, வீட்டு வரி செலுத்துவோர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிபந்தனை விதித்து, கண்டோன்மென்ட் எல்லைக்குள், நீண்ட பல ஆண்டுகளாக, குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு, ராணுவ நிலத்தில் குடியிருப்பதை காரணம் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை நிராகரிக்கும் செயலாகும்.

கண்டோன்மெண்ட் எல்லைக்குள் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் குடிதண்ணீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கண்டோன்மென்ட் கழகத்தை சார்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்து வரும் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து வந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருக்கும் இந்த நேர்வில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, நீக்கப்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கி கண்டோன்மென்ட் கழக தேர்தலை நடத்த வேண்டும் . 

இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், மாநில அரசு கண்டோன்மென்ட் கழக எல்லைக்குள் வாழ்ந்து வரும் குடிமக்களின் வாக்குரிமை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com