விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் விழுப்புரம் புத்தகத் திருவிழாவுக்கு அரங்கு அமைப்பதற்கான கால் கோல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் முதல் புத்தகத் திருவிழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வருகிற 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழாவை கண்டுகளித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவுக்கான அரங்கு அமைப்பதற்கான கால் கோல் விழா விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.