
ஈரோடு ராயபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கம் முன்பு சாலையில் பாலை ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆவினுக்கு பால் விற்பனை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர்களின் அதிகரித்து வரும் உற்பத்தி செலவை சமாளிக்க உதவும் வகையில், பசும்பால் விலையை 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டருக்கு 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் உயர்த்த சங்கம் கோரியது. அதுவரை ஆவினுக்கு பால் வழங்காமல் 17 தேதி முதல் போராட்டம் நடத்த அறிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட ஆவின் ஆரம்ப பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, நாளொன்றுக்கு, 3.5 லட்சம் லிட்டர் பால் ஆவின் பெறுகின்றது. இப்போது, சங்கத்தின் போராட்டம் காரணமாக, வரத்து இன்று கிட்டத்தட்ட 50 சதவீதமாக குறைந்தது.
ஈரோடு அருகேயுள்ள நசியனூரில் ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காலை கறவை மாடுகளுடன் மறியல் செய்தனர். பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாசருடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, பால் விலையை உயர்த்தக் கோரி, பாலை சாலையில் கொட்டி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிக்க: பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் கான் மனு தள்ளுபடி
தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்கக் கூடாது என்ற போராட்டம் தொடரும் என சங்கப் பொருளாளர் ராமசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.