வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

குப்பை, சாலையோரங்களிலும் கொட்டப்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்
வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை குப்பை, சாலையோரங்களிலும் கொட்டப்படுவதால் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால் அவற்றை விவசாயிகள் சாலையோரங்களிலும், குப்பைமேடுகளிலும் கொட்டுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்காத போது அவை குப்பையில் கொட்டப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில், அச்சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படாதது வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி தவிர்த்து மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும்  ஒரே காய்கறி தக்காளி ஆகும். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் உச்சத்தை அடைந்திருப்பதால் அதன் விலை பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சந்தைகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இப்போது மொத்த விலை சந்தைகளில் கிலோ ரூ.5-க்கும், சில்லறை விலைக்கடைகளில் ரூ.10-க்கும் மட்டுமே விற்கப்படுகிறது.

வெளிச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தக்காளியின் கொள்முதல் விலை கிலோ ஒரு ரூபாய் என்ற அளவுக்கு சரிந்து விட்டது. தக்காளியை பறித்து, சந்தைகளுக்கு கொண்டு செல்ல ஒரு கிலோவுக்கு  ரூ.4 வரை செலவாகிறது. ஆனால், கொள்முதல் விலையே ரூ.1 தான் எனும் போது, அது தக்காளியை பறிப்பதற்குக் கூட போதுமானதல்ல. அதனால், பல இடங்களில் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே அழுகுவதற்கு விவசாயிகள் விட்டுவிடுகின்றனர். பறிக்கப்பட்ட தக்காளிகளை சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக செலவாகும் என்பதால் சாலைகளிலும், குப்பைகளிலும் கொட்டுகின்றனர். குழந்தைகளைப் போல பார்த்துப் பார்த்து வளர்த்த காய்கறிகளை இப்படி கொட்டுவதைப் போன்ற கொடுமை கிடையாது.

தக்காளிக்கு ஏற்பட்ட நிலை தான் கத்தரிக்காய்க்கும். சந்தைகளில் கத்தரிக்காயின் விலையும் கிலோ  ரூ.60 முதல் ரூ.80 வரை என்ற நிலையிலிருந்து கிலோ ரூ.10 என்ற அளவுக்கு சரிந்து விட்டது. அதனால், கத்தரிக்காயின் கொள்முதல் விலையும் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டது. ஓரிரு இடங்களைத் தவிர பிற இடங்களில் கத்தரிக்காயை கொட்டும் நிலை ஏற்படவில்லை என்றாலும் கூட, செய்த செலவில்  மூன்றில் ஒரு பங்கு கூட கிடைக்காததால் கண்ணீர் விடுகின்றனர். இது ஏதோ இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஏற்பட்டுள்ள சூழல் அல்ல... ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் கண்ணீர் விடுவது தொடருகிறது.

ஆனால், விவசாயிகளின் இந்த சிக்கலுக்கு தீர்வு காண மத்திய, மாநில  அரசுகள் முயற்சி செய்யவில்லை. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு காய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான். அனைத்து காய்கறிகளுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்; அத்துடன் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதற்கு வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த அற்புதமான திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு இதுவரை முன்வரவில்லை.

அதே நேரத்தில் கேரள அரசு இத்திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது. கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20 சதவீதம் லாபம் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது. கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் விவசாயிகள் விளைபொருட்களை குப்பையில் கொட்ட வேண்டியிருந்திருக்காது. அத்துடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.  

விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை  தமிழகத்தை இப்போது ஆளும் திமுகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது; கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளது. 

எனவே, இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகளை காக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com